நாகை, புனித மாதரசி மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை முதன்மைக் கடற்கரை சாலையில் உள்ள புனித மாதரசி மாதா தேவாலயம் 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம். இத்தலத்தில் உள்ள புனித மாதரசி மாதாவின் திருச்சொரூபம் தலைசாய்ந்த நிலையில் இருப்பது இத்தலத்தின் மகிமைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
இத்தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஆக. 9-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, மன்னார்குடி, குழந்தை இயேசு திருத்தல பங்குத் தந்தை ஆரோ. அருளரசு, நாகை மறைவட்ட பங்குத் தந்தை ஏ. வின்சென்ட் தேவராஜ், உதவி பங்குத் தந்தை ஜெ. விட்டல் பிரசாத் ஆகியோர் கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். திருப்பலியின் நிறைவில், புனித மாதரசி மாதா திருச்சொரூபத்துடன் கூடிய அலங்கார திருத்தேர் பவனி நடைபெற்றது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.