சீர்காழியில் சுவர் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஏதேனும் நிகழ்ச்சி, கட்சி சார்ந்த விழாக்கள் நடைபெறுகிறது என்றால், அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவர். தற்போது, டிஜிட்டல் பேனர்களை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், விதிமுறைகள்படி டிஜிட்டல் பேனர்கள் வைத்தாலும் 3 நாள்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வதில் அதிக நாட்டம் செலுத்த தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் பேனர்களை விட சற்று செலவு அதிகம் ஏற்பட்டாலும் நீண்ட நாள்களுக்கு சுவர் விளம்பரங்கள் தாக்குப்பிடிக்கும் என்பதால், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பது அரசியல் பிரமுகர்களின் கருத்து.
இதனால், சீர்காழியில் தற்போது சுவர் விளம்பரங்கள் செய்வதில் அதிமுக, திமுகவினரிடையே போட்டா போட்டி நிலவுகிறது.
பிப். 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் அதிமுகவினர் நகர் மற்றும் புறவழிச் சாலை பகுதிகள், கிராமப் பகுதிகளில் உள்ள சுவர்களில் முன்கூட்டியே இடம்பிடித்து விளம்பரம் எழுத தொடங்கிவிட்டனர்.
இதேபோல், மார்ச் 1-ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோட்டில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு திமுகவினர் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இதற்கிடையே டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் தங்கள் பங்கிற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்துக்கு சுவர் விளம்பரம் செய்வதில் முனைப்பு காட்டிவருகின்றனர்.