நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் 5 தளங்களைக் கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல வளாக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தலைமை வகித்தார்.
பின்னர், அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தது: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையானது நாகை மாவட்டத்தில் உள்ள 2 -ஆவது பெரிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை 324 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 2,000 -க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 324 உள்நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆண்டுக்கு 4,000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளும், 165 பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவைச் சிசிச்சையும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவமனையில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் 3 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது, இந்த மருத்துவமனையில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் 75,150 சதுர அடி பரப்பளவில், 5 தளங்களைக் கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மைய வளாகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவத்துக்குப் பின் புறநோயாளிகள் பிரிவு, பிரசவத்துக்கு முன் நோயாளிகள் பிரிவு, நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேறு பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவு, பதிவறை, மருத்துவ அலுவலர் அறை, பிறந்த குழந்தைகளுக்கான பிரிவு மற்றும் பிற வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
இந்த வளாகமானது லிப்ட் வசதியுடன் 250 படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார்.
தொடர்ந்து கட்டடத்தின் வரைபட மாதிரிப் படத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ்(பூம்புகார்), வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பி.வி. பாரதி (சீர்காழி), மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ். தேன்மொழி, நாகை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார், வட்டாட்சியர் து. விஜயராகவன், நகர அதிமுக செயலர் விஜிகே. செந்தில்நாதன் மற்றும் மருத்துவப் பணிகள் கட்டடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் பொறியாளர்கள், மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர். பூமி பூஜைகளை எஸ். குருமூர்த்தி செய்தார்.