நாகை மாவட்டம், தரங்கம்பாடி ஜான்சன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தரங்கம்பாடி எருசலேம் ஆலய ஆயர் நவராஜ் ஆபிரகாம் தலைமை வகித்தார். டி.இ.எல்.சி. பேராயர் எட்வின் ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலர் வேதரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலசாலை அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஞானசேகரன், இலக்கிய மன்றம் குறித்துப் பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் சைமன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் விழாவின்போது கெளரவிக்கப்பட்டனர். டி.இ.எல்.சி. பேராயர் எட்வின் ஜெயக்குமார், பள்ளி வளாகத்தில் உள்ள தமிழறிஞர் சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவித்து, அரவது சிறப்புகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். 12 -ஆம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜான்சி மல்லிகா சமாதானத்துக்கு பள்ளி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், பாரம்பரிய நடனங்களான பறையாட்டம், கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அரங்கேற்றி, பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இதில் வர்த்தக சங்கத்தினர், மீனவ பஞ்சாயத்தார்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.