மயிலாடுதுறை வட்டம், மூவலூரிலுள்ள அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பிலுள்ள நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை மாநிலப் பொதுச் செயலர் மா. அழகிரிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: மூவலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் கோயில் உள்ளது. மார்க்கம் என்பது வழியைக் குறிக்கும் என்பதால், மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் மானுடர்களுக்கு நல்வழிகாட்டும் வள்ளலாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகளுடைய இக்கோயிலுக்கு 136 ஏக்கர் நஞ்சை நிலங்களும், 23 ஏக்கர் புஞ்சை நிலங்களும் உள்ளன.
இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அனுபவித்து வரும் குத்தகைதாரர்கள், கோயில் நிர்வாகத்துக்கு சரியாக குத்தகை கொடுப்பதில்லை. கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், கோயில் பராமரிப்பு இல்லாமல் ஆகிவிடும். இதை மீட்டெடுக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. எனவே, கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்டெடுக்க, குத்தகையை வசூல் செய்ய, கோயிலுக்குச் சொந்தமான இடங்களை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்வதைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பி.முருகன் கூறியது: கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படுமானால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.