மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு மாத கால மல்டி மீடியா மற்றும் டிஜிட்டல் புகைப்படப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
40 முதல் 60 சதவீதம் வரை கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித் திறன் குறையுடைய, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்குத் தேசிய சென்னை, திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு மாத கால இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கான வயது வரம்பு - 18 முதல் 40. கல்வித் தகுதி - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.
டிஜிட்டல் நான் எடிட்டிங், மல்டி மீடியா பயிற்சி, டிஜிட்டல் புகைப்படப் பயிற்சி, ஆடியோ என்ஜினியரிங், அனிமேஷன் உள்ளிட்டவைகள் குறித்து இந்தப் பயிற்சியில் பயிற்றுவிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு விடுதி வசதிக்காக ரூ. 4,500, பயிற்சி உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.