ஊதிய உயர்வுக் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், போராட்டம் நிறைவுக்கு வந்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை பணிக்குத் திரும்பினர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 4-ஆம் தேதி மாலை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் 8 நாள்கள் நடைபெற்ற நிலையில், அரசு மற்றும் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி நடுவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வியாழக்கிழமை மாலை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்றிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், 8 நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை காலை பணிக்குத் திரும்பினர்.
தொழிலாளர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு நடுவர் அமைக்கப்பட்ட மகிழ்ச்சியையும், பணிக்குத் திரும்பும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில், தொழிற்சங்கங்கள் சார்பில் நாகை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வாயிலில் வெள்ளிக்கிழமை காலை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டது.