தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, மன்னார்குடி ஜேசிஐ மன்னை அமைப்பு சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேரடி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் வி. அஞ்சறைபெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, மன்னார்குடி டிஎஸ்பி வ. அசோகன் பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், விபத்தில்லா பாதுகாப்பான பயணம், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுதல் குறித்து காவல் ஆய்வாளர்கள் மணிவேல் (மன்னார்குடி) சுப்பிரமணியன் (பரவாக்கோட்டை) ஆகியோர் பேசினர்.
இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ஜேசிஐ மன்னை அமைப்பினர், தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனப் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பந்தலடி வரை சென்றனர். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வணிகர்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இதில், போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் மா. ரவிச்சந்திரன், அமைப்பின் செயலர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.