நாகை மாவட்டம், சீர்காழி கடைவீதியில் உள்ள கடலைக் கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சீர்காழி கடைவீதியில் கடலை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் சண்முகம் (36). இவரது கடையில் மின்விசிறி ரெகுலேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்விசிறியில் தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ அருகிலிருந்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை உள்ளிட்ட மூட்டைகளிலும் பரவி எரியத் தொடங்கியது.
இதனால், கடைவீதியில் கரும்புகை பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கடலை மூட்டைகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.