பலமுறை கோரிக்கை விடுத்தும் மேம்படுத்தப்படாத பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைச் சாலையை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல்படுகை மற்றும் அளக்குடி வழியாக காட்டூர் கிராம் வரை செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமடைந்து போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக இருந்து வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த ஆற்றங்கரை சாலை ஆண்டுதோறும் பெய்யும் மழையால் சாலை பல இடங்களில் உடைந்து கரைந்துள்ளது.
சாலை நெடுகிலும் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரமுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலை நடுவில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.