அதிகாரிகளின் அலட்சியத்தால், சீர்காழியை அடுத்த புதுப்பட்டினத்தில் வாய்க்காலில் தேங்கிய குப்பைகளை வர்த்தகர் சங்கத்தினரே செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
புதுப்பட்டினம் கடைத் தெருவையொட்டி செல்லும் புதுமண்ணியாறு, பாசன வாய்க்கால் பழையார் மீன்பிடித் துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலமாக, வாய்க்காலில் தண்ணீர் வற்றிப்போய் விட்டதால், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியது. இதில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்குக் குப்பைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் கழிவு நீரில் கலந்து நின்றதால், துர்நாற்றம் வீசியதுடன், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்தது.
இதனால் சுற்றுப்புறச் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். இதைத்தொடர்ந்து, புதுப்பட்டினம் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் குபேந்திரன் தலைமையில், வியாபாரிகள் ஆலோசனை நடத்தி, வாய்க்காலில் தேங்கியக் குப்பைகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, வாய்க்காலில் தேங்கிக் கிடந்த குப்பைகளை கூலித் தொழிலாளர்கள் மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து குபேந்திரன் கூறுகையில், சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலை பொதுப்பணித்துறையினர், தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றார்.