மாநில அளவில் சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழக சுகாதாரத் துறையின் விருது பெற்ற நாகை மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு மற்றும் குடும்பநலத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
மாநில அளவில், 2017 -ஆம் ஆண்டில் காசநோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக நாகை மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு இரண்டாம் பரிசை வென்றது. இதேபோல, அதிகளவில் குடும்ப நல அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டதில் நாகை மாவட்ட குடும்ப நலத் துறை மூன்றாம் பரிசை வென்றது. இதற்கான பரிசுகள் மற்றும் விருதுகளை சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வழங்கினார்.
விருது பெற்ற காசநோய் தடுப்புப் பிரிவு மற்றும் குடும்ப நலத் துறை மருத்துவ அலுவலர்களை புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகம் அழைத்து, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டினார்.