அரசியல் கட்சிக் கொடி மரங்கள் சேதம்: சாலை மறியல்: இருவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே அரசியல் கட்சிக் கொடி மரங்களை சேதப்படுத்தியதைக் கண்டித்து,

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே அரசியல் கட்சிக் கொடி மரங்களை சேதப்படுத்தியதைக் கண்டித்து, பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கொடி மரங்களை சேதப்படுத்தியதாக பாமகவினர் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காடந்தேத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பாமக கொடி மரத்தில் இருந்த பழைய கொடியை அகற்றிய அக்கட்சியினர், புதிய கொடியை ஏற்றி அரை கம்பத்தில் பறக்கவிட்டிருந்தனராம். இதனிடையே, சனிக்கிழமை காலையில் பார்த்தபோது அதிமுக, திமுக கொடி மரங்களை சேதப்படுத்தியும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி மரங்களை அகற்றி இருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எஸ்.எம்.டி. மகேந்திரன் தலைமையில் திமுக, அதிமுக, இடதுசாரி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தலைஞாயிறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, காடந்தேத்தியைச் சேர்ந்த பாமக விவசாய சங்க ஒன்றியத் தலைவர் காந்தி (50), நிர்வாகி முருகேசன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com