நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்கள் மற்றும் நாகை மாவட்ட இறகு பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில், மாநில அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் அண்மையில் 5 நாள்கள் நடைபெற்றன.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். பரமேஸ்வரன் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. சிவா, இ.ஜி.எஸ். பிள்ளை இறகு பந்து கழகத் தலைவர் வி. தியாகராஜன், செயலர் கே. கார்த்திகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவை கே. சதீஷ்குமார், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சேலம் ஹெச். அருணேஷ், ஏ. விமல்ராஜா, பெண்கள் ஒற்றையர் பிரிவில் கன்னியாகுமரி வி.எஸ். வர்ஷிணி, பெண்கள் இரட்டையர் பிரிவில் கன்னியாகுமரி வி. நிலா, வி.எஸ். வர்ஷிணி, கலப்பு இரட்டையர் பிரிவில் கோவை பி. ஸ்வேதா, கே. சதீஷ்குமார் ஆகியோர் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி இறகு பந்தாட்ட அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு இறகு பந்து கழக மாநிலத் துணைச் செயலர் முகமது அலி, மாவட்ட இறகு பந்து கழகத் தலைவர் என். செந்தில்நாதன், செயலர் ஏ. உத்திராபதி, தொழிலதிபர் என். பன்னீர்செல்வம், சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலர் டி. மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.