சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் திருவிக்கிரமநாராயண பெருமாள் - லோகநாயகி தாயார் திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சீர்காழியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள் லோகநாயகிதாயாருடன் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் கடந்த 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சேஷ வாகனம், யானை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான திருவிக்கிரமநாராயண பெருமாள் - லோகநாயகி தாயார் திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, பெருமாள் - தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, அலங்காரம் நடைபெற்றது. மணமேடையில் லோகநாயகி தாயார் உடனாகிய திருவிக்கிரமநாராயண பெருமாள் எழுந்தருளியதும், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மங்களநாணை லோகநாயகி தாயார் கழுத்தில் பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். தொடர்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.