நாகை மாவட்டம், சீர்காழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக் கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கொடியேற்றிவைத்தார். இந்நிலையில், மர்மநபர்கள் அந்த கொடிக்கம்பத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சேதப்படுத்திவிட்டு தப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொகுதி செயலாளர் தாமு. இனியவன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தேவா, மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ் மற்றும் கட்சியினர் சேதப்படுத்தப்பட்ட கொடிக் கம்பம் அருகே சனிக்கிழமை கூடி முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி சேகர், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.