நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 10 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நாகை, நாகூர் பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதலாக இருக்கைகள் பொருத்தப்பட்டு, அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நாகை மாவட்ட ஆட்சியர், துணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். அழகிரிசாமி மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் நாகை, நாகூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றியும், அனுமதி பெறாமலும் இயக்கப்பட்ட 9 ஷேர் ஆட்டோக்கள் மற்றும் 1 சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.