திருவெண்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தார்.
திருவெண்காடு சம்பாகட்டளை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகள் சித்ரா (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருவெண்காடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதற்கிடையே, சித்ரா தனது வீட்டு வாசலில் உள்ள மின்கம்பத்தின்கீழ் பகுதியை தொட்டு விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மழையினால் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் சித்ராவின் மீது பாய்ந்தது. இதில், மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி சித்ரா உயிரிழந்தார். இதுகுறித்து, திருவெண்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.