கிடப்பில் போடப்பட்டுள்ள குண்டூரான்வெளி வண்டல் -அவரிக்காடு இணைப்புப் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியரிருக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் வி. தனபாலன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குண்டூரான்வெளி வண்டல்-அவரிக்காடு இணைப்புப் பாலம் கட்டும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு இதுவரை முடிக்காமல் உள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால், இப்பணி நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, புதிய ஒப்பந்ததாரரை நியமித்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.