"தில்லியில் நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கைகளில் மாநகராட்சிகளை குற்றம்சாட்டி வணிகர்கள் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்' என மாநகராட்சிகள் தெரிவித்துள்ளன.
தில்லியில் நடைபெற்று வருகின்ற சீலிங் நடவடிக்கை தொடர்பாக அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரவீண் கண்டேல்வால் திங்கள்கிழமை தினமணிக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு வடக்கு, கிழக்கு மாநகராட்சிகளின் செய்தித் தொடர்பாளர் யோகேந்திர சிங் மன் செவ்வாய்கிழமை அளித்த பதில் வருமாறு:
மாநகராட்சிகளே வணிக வளாகங்களை சீல் வைப்பதால் மாநகராட்சிகள் மீது வணிகர்கள் கோபம் கொள்கின்றனர். ஆனால், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்ட வணிக வளாகங்கள்தான் சீல் வைக்கப்படுகின்றன. தவறு செய்த வணிகர்கள்தான் தண்டனைக்கு உள்ளாகின்றனர். தில்லியில் லட்சக்கணக்கான வணிகர்கள் தொழில் செய்யும் போது விதிமுறைகளை மீறிய ஒரு சில ஆயிரம் கடைகளே சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநகராட்சிகள் மீது குற்றம்சாட்டி தங்களது தவறுகளை வணிகர்கள் மறைக்க முடியாது. முன் அறிவிப்பு இல்லாமல் கடைகள் சீல் வைக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டுவதில் அர்த்தம் இல்லை. தவறு செய்வோருக்கு முன் அறிவிப்பு செய்ய வேண்டிய தேவை இல்லை. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை.
மாஸ்டர் பிளானை அறிமுகப்படுத்துவதில் மாநகராட்சிகள் தாமதம் காட்டியதாலேயே சீலிங் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்ற பிரவீண் கண்டேல்வாலின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். ஏனென்றால் மாஸ்டர் பிளானை இறுதி செய்ய வேண்டியது நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் வேலையாகும். அவர்களது தாமதம் காரணமாகவே மாஸ்டர் பிளானை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு மாநகராட்சிகளைக் குற்றம் சொல்வதில் எவ்வித அடிப்படையும் இல்லை என்றார் அவர்.
இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "உருமாற்றக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக பிரவீண் கண்டேல்வால் கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். உருமாற்றக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணத்தில்தான் பார்க்கிங் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன; அதற்கான கணக்கு பேணப்படுகிறது. தேவைப்பட்டால் அந்த விவரங்களை வழங்கத் தயாராக உள்ளோம்' என்றார்.