தில்லியில் பல்ஸ்வா டைரி பகுதியில் குண்டுக் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி சம்தா விஹார் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு தில்லி, பல்ஸ்வா டைரி பகுதியில் மார்பில் குண்டுக் காயமடைந்த நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக புராரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை யாரும் சுட்டுக் கொன்றனரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கள்ளத் தொடர்பு விவகாரம் உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுரேஷின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அவர் தனது மூன்று சகோதரர்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார் என்றனர்.