மத்தியில் ஆளும் பாஜகவின் நான்கு ஆண்டு கால ஆட்சியை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர்களான சஞ்சய் சிங், திலீப் பாண்டே ஆகியோர் கூறியதாவது: மோடி அரசில் மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட 1.5 மடங்கு விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜக எதிர்ப்புத் தெரிவித்த சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, ஜிஎஸ்டி, ஆதார் ஆகியவற்றை இப்போது பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த 2014 -ஆண்டு தொடங்கி இதுவரை 211 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பின்னடைவு, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை திசைத்திருப்ப உடற்தகுதி விவகாரத்தை பிரதமர் கூறி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு அக்கறை காட்டியுள்ளது என்றனர்.