தலைநகர் தில்லியில் சனிக்கிழமை 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. இது நிகழ் கோடைப் பருவத்தில் அதிகபட்ச அளவாகும்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது, நிகழ் கோடை பருவத்தில் அதிகம் என்பதுடன், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். கடந்த 2015 கோடை பருவத்தில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சனிக்கிழமை குறைந்த பட்ச வெப்பநிலை 24.5 டிகிரியாக பதிவானது.
அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால், 45 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே வெப்பநிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை பதிவான அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 43.6, 23.8 டிகிரி செல்சியஸ் ஆகும்.