குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்து தில்லி அரசு கடந்த மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஜிடிபி மருத்துவமனையில் இந்த உத்தரவு முன்னோடித் திட்டமாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில், சோஷியல் ஜூரிஸ்ட் என்ற அரசு சாரா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. அதில், "மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது, மக்கள் சார்ந்திருக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. இதுபோன்ற பாகுபாடு நாட்டில் வேறெங்கும் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் அமர்வு விசாரித்து, வழக்கு குறித்த உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குரு தேஹ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்பாக தில்லி அரசின் உத்தரவு செல்லாது என அறிவித்தனர்.
மேல்முறையீடு செய்ய தில்லி அரசு திட்டம்
தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தில்லி அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சையில் தில்லிவாசிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்பாக அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்றார்.