ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள துலிப் ஆரஞ்ச் டவுண்ஷிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில், காயமடைந்திருந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆகியுள்ளது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் ஸ்வாதி கர்க் என்ற கட்டட உள்ளமைப்பு வடிவமைப்பாளர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது தாயாரான வைஷாலி திலகர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஆஸ்துமா நோயாளியான வைஷாலி அந்தத் தீ விபத்தை அடுத்து மூச்சுத் திணறல் மற்றும் காயங்களுடன் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதன்கிழமை ஆர்டெமிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதியாக வியாழக்கிழமை மத்தியப் பிரதேசத்திலுள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அங்கு உயிரிழந்தார்.
அவரது மகள் ஸ்வாதி உயிரிழப்பதற்கு முன்பாக அந்தக் கட்டடத்தில் இருந்து பலர் வெளியேற உதவியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இரு பெண்களின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துலிப் ஆரஞ்ச் டவுண்ஷிப்பில் உள்ள பெண்கள் டவுண்ஷிப் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், டவுண்ஷிப்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யுமாறு கோரி நகர துணை ஆணையர் வினய் பிரதாப் சிங்கிடம் மனு அளித்தனர்.