தில்லியில் இரண்டரை வயது மகள் கண் முன்னே மனைவியைக் கொலை செய்த கணவர் போலீஸில் சரணடைந்தார்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தில்லி கமலா மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் காமில் (23). இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தார்.
அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேஷ்மா (22). இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கமலா மார்க்கெட் காவல் நிலையத்திற்கு காமில் நடந்து வந்தார். தாம் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது, ரத்தக் காயங்களுடன் அவரது மனைவி ரேஷ்மா இறந்துகிடந்தார்.
அவரை காமில் வெள்ளிக்கிழமை கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
சடலத்தை வீசி விடுவதா அல்லது போலீஸில் சரணடைவதா என்ற குழப்பத்துடன் அவர் இருந்துள்ளார்.
போலீஸில் காமில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று தாம் குடிபோதையில் இருந்ததாகவும், இரு ஆண்களுடன் ரேஷ்மாவுக்கு தொடர்பிருப்பதாக அவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது ரேஷ்மாவை கொன்றதாகவும் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.