குமரி மாவட்டம் கோதையாறு அருகே 50 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் இளைஞர் இறந்தார். 3 பேர் மீட்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (24). இவர் குமரி மாவட்டம், மேல்புறத்தில் நூடுல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் தனது கடையில் வேலை செய்யும் சேரன்மகாதேவியைச் சேர்ந்த மகேஷ் (15), முப்பிடாதி (19) ஆகியோருடன் கோதையாறு மார்க்கெட் ஏரியாவில் வசிக்கும் ரப்பர் கழகத் தொழிலாளியான முருகனின் (47) வீட்டுக்கு சென்றார்.
பின்னர், இவர்கள் நான்கு பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில், கோதையாறு மின் நிலையப் பகுதிக்குச் சென்றுவிட்டு திரும்பினர். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இதில், காயமடைந்த முருகன் எழுந்து வந்து, கோதையாறு புறக்காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடந்த மற்ற மூவரையும் மீட்டனர்.
இவர்களில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சங்கர் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.