வெள்ளமடம் அருகே அனுமதியின்றி குளத்தில் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட 18 டிராக்டர்கள், 3 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து விவசாயப் பணிகளுக்கு மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட குளங்களில் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில், தோவாளை வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரவியம் பிள்ளை, ஹரி, மாசானம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வெள்ளமடம், பீம நகரி ஊராட்சிக்கு உள்பட்ட சந்தியகுளத்தில் ஆய்வுக்காக சென்ற போது அங்கு சுமார் 18 டிராக்டரில், 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் மண் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் இயந்திரங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 18 டிராக்டர்களையும், 3 பொக்லைன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.