சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரிமாவட்டத்தில் போலீஸார் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆக. 15 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தேசியக் கொடியேற்றி, போலீஸாரின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்குகிறார். பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
விழாவை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கத்தினை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்காக போலீஸாரின்அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண், பெண் போலீஸாரும் கலந்துகொண்டனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடைபெற்ற சோதனையில் 584 பேர் மீதும், தக்கலையில் நடைபெற்ற சோதனையில் 267 பேர் மீதும், குளச்சலில் 228 பேர் மீதும், கன்னியாகுமரியில் 339 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். பேருந்துநிலையங்கள், முக்கிய சந்திப்புகளிலும் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.