மார்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (46). தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர், சனிக்கிழமை இரவு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் வந்த போது அங்கு ஒரு கும்பல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுக்கொண்டிருந்ததாம். அவர்களிடம் ஓரமாக நிற்கும்படி பேருந்து ஓட்டுநர் தெரிவித்தாராம். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அக் கும்பல் ஓட்டுநரை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஜார்ஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், செந்தில், வினோத், பென்னட் ஆகியோர் மீது மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.