குமரி அரசு பழத்தோட்டத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அரசு பழத்தோட்டம் உள்ளது. திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் அரண்மனைக்கான பழத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மகாராஜா கன்னியாகுமரியில் ஓய்வு எடுப்பதற்காகவும் இந்த பழத்தோட்டம் ஏற்படுத்தப்பட்டது.
31 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இப்பண்ணையில் விளையும் பழங்கள் அரண்மனைக்கு அனுப்பப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்த போது,  இந்த பழப்பண்ணை தமிழக வேளாண்மைத் துறையின் கீழ் வந்தது.  இப்பழத்தோட்டத்தில் மா,  கொய்யா,  சப்போட்டா,  நெல்லி போன்ற பழ வகைகளும்,  பிச்சி,  மல்லிகை,  முல்லை,  ரோஜா, குரோட்டன்ஸ் போன்ற மலர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.  இங்கு இரு பருவங்களிலும் காய் பலன் தரும் மாமரங்கள் உள்ளன. ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு பழவகைகளும்,  செடிகளும் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.  
இந்தப் பூங்காவில் செயற்கை நீரூற்று,  சிறுவர் பூங்கா,  மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம்,  பூந்தோட்டம்,  அலங்காரச் செடிகள் மற்றும் மரங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன.  கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்ததும் பூங்காவுக்குத் தேவையான அலங்கார செடிகள் நடும் பணி தொடங்க உள்ளது.  நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் முழுப் பணிகளும் முடிக்கப்பட்டு பூங்கா திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com