இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சியை உருவாக்க முடியாது என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறினார்.
மக்கள் ஒற்றுமை மற்றும் மனித வளர்ச்சிக்கான பாராளுமன்றம் என்ற அமைப்பு கன்னியாகுமரியில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்று அவர் பேசியது: 1,700 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம்தான் இந்தியாவிலேயே இயற்கை வளம் அதிகம் நிறைந்த மாவட்டம். மொத்த பரப்பளவில் 600 முதல் 700 சதுர கி.மீ. காடுகள், மலைகள், நீர்நிலைகள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள பகுதியில் மக்கள் வசிக்கின்றனர். இதனால் பிற மாவட்டங்களை காட்டிலும் மக்கள்தொகை அடர்த்தியாக உள்ளது. தற்போது இம் மாவட்டத்தில் இனயம் துறைமுகம், நான்கு வழிச்சாலை, விமான நிலையம் போன்றவை அமையுமானால் வயல், வீட்டுமனை, கடல்வளம், குளங்கள் போன்றவை அழியும் நிலைஏற்படும். இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சியை உருவாக்க முடியாது. வளர்ச்சி என்பது முன்னேற்றமாக மட்டுமே இருக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேன்மை போன்ற நிலைகளில் வளர்ச்சியடைய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலர் ஆரோக்கிய டொமினிக்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் தாமஸ் பிராங்கோ, சமூக ஆர்வலர் அருணா ராய், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
மாலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணி முக்கிய சாலை வழியாக வந்து குமரி சமூக நலக்கூடத்தில் நிறைவடைந்தது.