கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று இதுவரை 462 மீனவர்கள் கரைதிரும்பவில்லை என, வேளாண் துறை உற்பத்தி ஆணையரும், வேளாண் துறை அரசு முதன்மைச் செயலருமான ககன்தீப்சிங் பேடி, ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் ஆகியோர் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில், தூத்தூர், மேல் மிடாலம், கீழ் மிடாலம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடிக்கச் சென்று புயலில் சிக்கி இதுவரை கரைதிரும்பாத மீனவர்களின் வீடுகளுக்கு, ககன்தீப்சிங் பேடியும், சஜ்ஜன்சிங் ரா. சவாணும் ஆறுதல் கூறினர்.
தூத்தூர் மீனவக் கிராமத்தில், மீனவ மக்களுக்காக நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியையும் பார்வையிட்டனர்.
அப்போது, கரைதிரும்பாத மீனவர்களைத் தேடும் பணி முழுவீச்சுடன் நடைபெறுவதால், மீனவ மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்படி 13 வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற 427 மீனவர்களும் இதுவரை கரைதிரும்பவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
பத்மநாதபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால சங்கரா, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.