குமரி கடலில் ரூ. 20 கோடியில் புதிய படகுத்தளம்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 படகுகள் நிறுத்தும்
குமரி கடலில் ரூ. 20 கோடியில் புதிய படகுத்தளம்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 படகுகள் நிறுத்தும் வகையில் ரூ. 20 கோடி செலவில் அதிநவீன படகுத்தளம் அமைக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு விவேகானந்தரின் முழுஉருவ வெண்கலச் சிலை, தியான மண்டபம், பகவதியம்மன் தவம் செய்ததாகக் கருதப்படும் கால்பாதம் ஆகியன அமைந்துள்ளன. இதனை விவேகானந்த கேந்திரத்தினர் பராமரித்து வருகின்றனர். இதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான எம்.எல். பொதிகை, எம்.எல். குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது படகுத்தளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றி அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு விடுவது வழக்கம். ஆனால் கடல்சீற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் தாழ்வு போன்ற காலகட்டத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் பயணிகள் சேவை நடைபெறுகிறது. இதனால் திருவள்ளுவர் சிலையைப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள படகுத்தளத்தில் ஒரு படகு மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளதால் படகுத் துறையில் பயணிகள் பலமணி நேரம் காத்திருப்பதோடு, சீசன் காலத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள படகுத்தளத்தை நவீனமுறையில் நீட்டிக்க மத்திய, மாநில அரசு முடிவு செய்துள்ளன. ஒரேநேரத்தில் மூன்று படகுகள் நிறுத்தும் வகையில் படகுதளம் ரூ. 20 கோடி மதிப்பில் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளதாகவும், இன்னும் 6 மாதகாலத்தில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே இரு மண்டபத்துக்கும் இடையே இணைப்புபாலம் அமைக்க மத்திய அரசு ரூ. 100 கோடி மதிப்பில் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2016இல் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள்...
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை படகுச்சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு நினைவிடங்களையும், கடந்த 2016இல் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் 60 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com