கன்னியாகுமரி கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து சுமார் 3 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சின்னமுட்டம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் ஆய்வாளர் சகாயஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜேசுராஜ், தலைமைக் காவலர் நீலமணி மற்றும் காவலர்கள் சுனில்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் படகு மூலம் சென்று கப்பலில் ஆய்வு மேற்கொண்டனர்.
கப்பல் கேப்டன் ஷைனி மற்றும் கப்பலில் இருந்த 10 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தனியாருக்குச் சொந்தமான இந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு கோலாலம்பூர் சென்று விட்டு அங்கிருந்து கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி புறப்பட்டது. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கப்பல் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வரமுடியவில்லை.
இதனால் கப்பலில் இருந்த டீசல் குறைந்து விட்டது. எனவே கன்னியாகுமரி கடல் பகுதியில் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளதாகவும், கப்பலின் உரிமையாளரிடமிருந்து டீசலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஏற்கெனவே கப்பல் நிர்வாகத்துக்கும், கடலோர பாதுகாப்புப் படைக்கும் உரிய தகவல் கொடுத்ததாகவும் கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.