நாகர்கோவிலில் வியாழக்கிழமை (ஜூலை 20) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவிஇயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 20 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் வேலையளிப்போர் நேரடியாக வருகை தந்து தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். மேலும், கனரக வாகன ஓட்டுநர்களும் கலந்துகொள்ளலாம்.
தனியார் துறையில் வேலைக்குத் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படாது. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவன பிரதிநிதிகள் ஜூலை 20 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வேலைவாய்ப்பளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களது தேவை விவரங்களை நாகர்கோவில், கோணம் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04652-264191 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ உடனே தெரிவிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.