நாகர்கோவிலில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ. 3.25 லட்சத்தைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் நாஞ்சில்நகரைச் சேர்ந்தவர் விஜயன்(40). ஆசாரிப்பள்ளம் டாஸ்மாக் மதுக்கடையின் கண்காணிப்பாளர். இவர், மதுக்கடையில் வசூலாகும் பணத்தை தினமும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டு, மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை இரவு பணி முடிந்ததும் கடையில் வசூலான ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். தேரேகால்புதூர் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி, அந்தப் பணத்தை பறித்துச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.