மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் உதவியாளர் எனக் கூறி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மருத்துவரிடம் பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மருத்துவரின் செல்லிடப்பேசிக்கு கடந்த மே மாதம் தொடர்புகொண்ட ஒருவர், தான் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் உதவியாளர் என்றும், அமைச்சரை வரவேற்று பேனர் மற்றும் அலங்கார வளைவு வைக்க ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், மருத்துவரிடம் பணம் கேட்டு செல்லிடப்பேசியில் பேசியவர் சென்னை தண்டையார்பேட்டை, அன்னை சந்தியாநகரைச் சேர்ந்த முகமது மீரான் மகன் முகம்மது ரபீக் (45) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பணத்தை நேரில் தருவதாக கூறி, முகம்மது ரபீக்கை மருத்துவர் மூலம் சனிக்கிழமை மார்த்தாண்டத்துக்கு வரவழைத்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை குழித்துறை நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி, குழித்துறை கிளை சிறையில் அடைத்தனர்.