இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, "தகுதி வாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்; அடிப்படை பணியாளர் முதல் உதவி இயக்குநர் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்யவேண்டும்; பேரூராட்சி துறையில் உள்ள அனைத்து சீருடைப் பணியாளர்களுக்கும் சலவைப்படி வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, பேரூராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு குமரி மாவட்ட அமைப்பாளர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் ராஜ்குமார் போராட்டத்தை தொடங்கிவைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பகவதியப்ப பிள்ளை, நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலச் செயலர் லீடன் ஸ்டோன், பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரூராட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.