பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நாகர்கோவிலில் புதன்கிழமை மாலை நேர தர்னா போராட்டம் நடத்தினர்.
ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தின்போது, "தமிழகத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணிபுரியும் ஆட்சியர்களை, நிர்வாக நலன் கருதி மாற்றுப்பணியிடம் வழங்கி, அவ்விடத்தில் இளம் ஆட்சியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; பதவி உயர்வில் செல்லும் துணை ஆட்சியர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு வழங்க வேண்டும்; வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு முடிந்தவர்களை மாற்றம் செய்ய வேண்டும்; தேர்தல் நடக்கும் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் தேர்தல் அலுவலர்களை பணிமாறுதல் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும்; "ஸ்மார்ட்' குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தில் உள்ள பல குளறுபடிகளை களைந்திடவும், வட்ட வழங்கல் பிரிவு அலுவலர்களின் பணி நெருக்கடிகளை கருத்தில் கொண்டும் போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் நெறிமுறைகளை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கல்குளம் வட்டத் தலைவர் தினேஷ் சந்திரன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், மாநிலச் செயலர் மூர்த்தி, இணைச்செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். மணிகண்டன் நன்றி கூறினார்.