பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கேப் பொறியியல் கல்லூரி, கேப் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து தயாரித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை (ஸ்டிக்கர்கள்) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு, அவர் மேலும் பேசியது:
மாவட்டத்தில், நிகழாண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மழை பொய்த்ததை தொடர்ந்து, குடிநீரின் அவசியம், அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஒட்டுவில்லை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரின் அவசியம் அறிந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களை சரியாக பழுது நீக்கி தண்ணீர் வீணாக வெளியேறாதவாறு உபயோகிக்க வேண்டும் என்றார் அவர்.
இதையொட்டி, ஆட்சியர் தலைமையில், மாணவர், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், இணை இயக்குநர்(வேளாண்மை துறை) சந்திரசேனன் நாயர், கேப் பொறியியல் கல்லூரி தலைமைச் செயல் அலுவலர் அருண்குமார், தாளாளர் கோலப்பன், முதல்வர் அழகேசன், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.