மார்த்தாண்டத்தில் ஏ.டி.எம். இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை திறந்த நிலையில் கிடந்ததையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம், மார்த்தாண்டம் தனியார் கல்லூரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இரண்டு ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இயந்திரத்தின் மேல் பகுதி திறந்த நிலையில் காணப்பட்டது. தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரம் சில நாள்களாக பழுதடைந்து இயங்காமல் இருந்ததாகவும், அதை பழுதுபார்க்க வந்த பணியாளர்கள் இயந்திரத்தை சரிவர மூடாமல் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.