நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் வாராந்திர ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டதற்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவிலிலிருந்து ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (12690/12689 )வாராந்திர ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றி இயக்கப்பட இருக்கிறது.
இந்த ரயில் வழித்தடம் மாற்றப்பட்ட முதல் சேவை அடுத்த ஆண்டு (2018) மார்ச் 9ஆம் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்து நாமக்கல் வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக மார்ச் 11ஆம் தேதி நாகர்கோவிலிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கும் போது 42 கி.மீ. தொலைவு குறையும். இதனால் பயண நேரமும் கணிசமான அளவில் குறையும்.
இந்த ரயிலின் சேவை தற்போது திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருச்சி செல்லாமல் இயக்கினால் இன்னமும் பயணநேரம் குறைவதோடு கட்டணமும் குறையும். அதோடு இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
இதே போல் நாகர்கோவில் - மும்பை வாரத்துக்கு நான்கு நாள் ரயிலையும் நாமக்கல் வழியாக மாற்றி இயக்கி தினசரி சூப்பர் பாஸ்டு ரயிலாக இயக்க வேண்டும் எனஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.