முதியோர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய, உலக முதியோர் தினவிழா நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து அவர் மேலும் பேசியது :
தமிழக அரசு, சமூகநலத்துறை மூலம், முதியோர்களுக்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமுதாயத்தில் முதியோர்களை அனைவரும் மதிக்க வேண்டும், அவர்களை அன்போடு அரவணைக்க வேண்டும் என்றும், சமூகநலத்துறையின் மூலம் பல்வேறு உதவித்தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், முதியோர்கள் அளிக்கும் புகார்கள் மீது, விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, முதியோர்கள் தங்களது புகார்களை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். மேலும், முதியோர் இல்லத்தில் உள்ள சகோதரிகள் முதியோர்களின் தேவை அறிந்து, உடல்நல பரிசோதனைகள் செய்வதோடு, அவர்களை மிகவும் அன்போடு அரவணைக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஆட்சியர் , பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் உள்ள 67 முதியோர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கி, பரதநாட்டியம் ஆடிய மூதாட்டி லூர்து உள்பட கலைநிகழ்ச்சிகள் நடத்திய மூதியோர் குழுவினரை பாராட்டினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மேக்காமண்டபம், உம்மன்கோடு என்ற இடத்தில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்துக்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லச் செயலர் அருள் சகோதரி ஜெரின் பிரான்சிஸ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பி செல்வி பியூலா, சமூகநல அலுவலர் (ஓய்வு) விமல்டா டெய்சி, ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.