கிராம நலன் மற்றும் தூய்மைக்கான இருவார விழாவை முன்னிட்டு, இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவிலில் திறன் ரதத்தை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ரதத்தை தொடங்கிவைத்து, அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆட்சியர் பேசியது: கிராம நலன் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் திட்டத்தின் கீழ், இம்மாவட்டத்தில், அக்.1முதல் 15ஆம் தேதி வரை கிராம ஊராட்சிகளில் கிராம தூய்மை, முழு சுகாதாரம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்கள் நடத்துதல், வங்கியாளர்களுக்கான கருத்தரங்கு நடத்துதல், கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் முகாம் நடத்துதல், சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்தல், மின்னணு முறையில் பணமில்லா பரிமாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்துவதோடு, 83 கிராம ஊராட்சிகளில் அடிப்படை புள்ளி விவர கணக்கெடுப்பு பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வியக்கத்தின் மூலம், ஊரகப்பகுதிகளில் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பல்வேறு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் உதவித்தொகையுடன் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளர்ப்புப் பயிற்சியை பெற விரும்பும் இளைஞர்கள் www.kaushalpanjee.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் பெற விரும்பும் பயிற்சி பற்றிய விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீன், உதவித் திட்ட அலுவலர் அந்தோணி சிலுவை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.