நாகர்கோவிலில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால், விபத்துகள் தொடர்ந்து வருவதையடுத்து, குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மணிமேடை, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கோட்டாறு வரை செல்லும் பிரதான சாலை வாகன ஓட்டிகளை மிகவும் அச்சுறுத்தும் நிலையில் உள்ளது. இதே போல் நகரில் பல சாலைகள் உள்ளன.
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து, கிறிஸ்துநகர் நோக்கி செல்லும் சாலையிலும் குழி தோண்டி, வளையம் அமைத்த பகுதியில் மட்டும் ஒரு இடத்தில் பணி முழுமை செய்யப்படவில்லை. இந்த குழிக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த ஷ்யாம், பைக்கில் வந்த மற்றொரு பெண்மணி என 2 பேர் இந்த குழியில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிறிஸ்துநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழைக்கன்றை நட்டு அப்பகுதியில் சாலை பழுதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் செய்துள்ளனர்.
பிரதான சாலையான இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.