ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியது: தமிழக அரசு பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், டெங்கு காய்ச்சலை பரப்புகிற ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து, அதை அழிப்பதற்கான வழிமுறைகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், வியாழக்கிழமைதோறும் டெங்கு தடுப்பு தினமாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், இதர கல்வி நிலையங்கள் மற்றும் விடுதிகள், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள், களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல், வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர், மாணவிகள் இதுகுறித்து மற்றவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம். மதுசூதனன், பள்ளித் தலைமையாசிரியர் எம்.ஆர். ராபர்ட், உதவி தலைமையாசிரியர் கிளாரா பூரணநேசி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.