இருவார சுகாதார இயக்க விழாவையொட்டி, குமரி மாவட்டத்தில் 11,875 தொகுப்பு மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில், தொகுப்பு மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சித் துறை மூலம், அனைத்து மாவட்டங்களிலும், கிராம வளர்ச்சி மற்றும் தூய்மைக்கான இருவார சுகாதார இயக்க விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அக். 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் அதிக அளவில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில், சாலை ஓரங்களில் 8,500 மரக்கன்றுகள் நடும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் இதுவரை 4,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மேலும், 11,875 தொகுப்பு மரக்கன்றுகள் நடும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 5,425 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும்பணியில் 100 மரக்கன்றுகளும், தொகுப்பு மரக்கன்றுகள் நடும்பணியில் 175 மரக்கன்றுகளும் நடும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் கவிதா, உதவி திட்ட அலுவலர் தமிழ்செல்வி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.