ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, குமரி மாவட்ட கிளைத் தலைவர் பி.குணசேகரன் தலைமை வகித்தார். மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை, இதர துறைகளோடு ஒப்பிட்டு கால தாமதம் செய்யாமல் தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி உடனடியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், களப்பிரிவில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்களின் பணிகளை கூடுதலாக செய்துவரும் களப்பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
செயலர் டி.செல்வதாஸ், சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவர் கே.செல்லப்பன், பொருளாளர் டி.ராஜகோபால், இணைச் செயலர் இர்வின்தாஸ், நாகர்கோவில் கோட்டத் தலைவர் டி.செந்தில்குமார், செயலர் ஜி.கிறிஸ்துதாஸ், தக்கலை கோட்டத் தலைவர் டி.சந்திரசேகர், செயலர் எம்.மோகன்தாஸ், குழித்துறை கோட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தன், செயலர் எஸ்.சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.