மார்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு மினிலாரியில் கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் சிவராஜபிள்ளை தலைமையிலான போலீஸார் புதன்கிழமை மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், லாரியில் இருந்த ஓட்டுநர் மற்றும் கிளீனரை பிடித்து, மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
உணவு கடத்தல் பிரிவு ஆய்வாளர் செழியன் தலைமையிலான போலீஸார், தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மங்கலம் பாலசிங்கம் (35), அம்பலசேரி கனகராஜ் (50) ஆகிய அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரள மாநிலத்தில் விற்க கொண்டு செல்வது தெரிய வந்தது.